Wednesday, July 10, 2024

Education in Tamil literature - தமிழ் இலக்கியங்களில் கல்வி

 

 

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் 
‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல்.

 கல்வி:

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல். மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்பவல்லது கல்வி.

 மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.


எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.              
சுவாமி விவேகானந்தர்

கல்வி கற்றவரின் சிறப்பு
:அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர் ஆவார்கள்.

“மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னலில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்கு
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை: கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு”


ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனை விட, குற்றமில்லாமல் கல்வி கற்றவன் சிறப்புடையவன். ஏனெனில், மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கல்வி கற்றவர்களால் மட்டுமே வாழமுடியும் எனில் மிகையல்ல.

' கல்வியைப் பதித்து வைத்த இடத்திலிருந்து யாராலும் கவர்ந்துவிட முடியாது, தக்கவர்க்குக் கொடுப்பதனால் குறைவுபடாது. செல்வத்தைப் பறித்துக் கொள்ளும் அரசராயினும், பிறராயினும் அதனைக் கவர்ந்துக் கொள்ள முடியாது. எனவே ஒருவன் தனது மக்களுக்குப் பின்னர் தேவைப்படும் எனத் தேடிவைத்துச்; செல்ல வேண்டியது பொருட்செல்வமன்று. அதனைவிட உயர்ந்த கல்விச் செல்வமே.

'எச்சமென ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற" (134)
என்பது நாலடியார் தரும் கருத்து.

 இக்கல்வியானது,
'வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடி
உழல்வதென்னே" (69)

'என்பது விவேகசிந்தாமணி பாடல்

'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (183)

என்று புறநானூறும்,

'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை வருக என்பர்” (38)

என்று வெற்றிவேற்கையும்
கற்றவர்கள் எக்காலத்தும் மதிக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்துகின்றன. கற்றவர்களை அரசன் விரும்பி ஏற்பான்; கற்றவர்கள் பார்வையில் சாதியில்லை; மதமில்லை; இனமில்லை; கீழோர் மேலோர் என்ற வேறுபாடில்லை; சமமாக மதிக்கும் மாண்பே அவர்களுடையது என்பது பெறப்படுகிறது.

எத்தகைய அறிஞனாயினும், பெரியோராயினும் ஆற்றைக் கடக்க நினைப்பவர்கள் தோணியில் செல்லும் போது தோணியோட்டி எந்தச் சாதி, எந்த இனம், எந்த மதம், எந்த நாடு, எந்த மொழி என்று பார்ப்பதில்லை. அவன் துணை கொண்டே அந்த ஆற்றைக் கடக்கின்றனர். ஏனெனில் அவன் அத்தொழிலைக் கற்றவன், கற்றவர்க்கு என்றைக்கும் மதிப்புண்டு. கல்வி இளையவர் என்றோ முதியவர் என்றோ, ஆண் என்றோ பெண் என்றோ பார்ப்பதில்லை. அது எல்லோரையும் சமமாக இணைத்து எழுச்சி கொள்ள வைக்கிறது.

'கற்றோர்க்குத் தம்மூர் என்று ஊரில்லை" 
என்று நான்மணிக்கடிகையும்,

'இளமையில்கல்" என்று ஒளவையும் மொழிந்தனர்.

'மன்னர்க்குத் தன்தேச மல்லாற்; சிறப்பில்லை
 கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு" (26)
என்று மூதுரை நல்வழி காட்டுகிறது.

கல்வி கற்காதவர்களின் நிலை:

முறையாக கல்வி கற்காமல் கற்றவர்களைப் போன்று நினைத்தக் கொள்ளும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். கல்வி கற்காதவர்களின் நிலையைப் பற்றி,
“கானம் மயில் ஆடக்கண்டு இருந்தவான் கோழி
தானும் அதுஆகப் பாவித்து –தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்றகவி”

மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடுவதைப் போன்றது கல்வி கற்காதவர்களின் நிலை. கல்வி கற்றவர்கள் ஆழமாக பொருள் விரித்துக் கூறுவர். கல்வி கற்காதவர்கள் பொருள் விரித்துக் கூறும் போது சொற்குற்றமும், பொருள் குற்றமும் இருக்கும் என்கிறார். கல்லாதவர்கள் இகழப் படுவார்கள், புகழப்படமாட்டார்கள்.

“கலைஆகிக் கொம்புஆகிக் காட்டகத்தே நிற்கும்
அவைஅல்ல நல்ல மரங்கள்! – சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டாதவன் நல்மரம்”


கல்விஅறிவும் குறிப்பறியும் குணமும் இல்லாதவர்கள் சிறந்த மரங்களாவர். மரங்களுக்கு கிளை, குறுங்கிளை இருப்பதைப் போல இவர்களுக்கும் கை, கால்கள் இருக்கின்றன. ஆறரிவுடைய மனித இனத்தில் பிறந்தும் கல்வி அறிவும், குறிப்புணரும் குணமும் இல்லாதவர்கள் காட்டிலுள்ள மரங்களுக்கே ஒப்பாவார்கள் என கல்வி கற்காதவர்களின் தோற்றத்தை எடுத்துரைக்கின்றார். கல்வியறிவு இல்லாதவர்கள் கற்றவர்களின் சொற்களை மதித்துக் கேட்க மாட்டார்கள்.


நாலடியார் - 14.கல்வி- 131 முதல் 140 வரை

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.


திருக்குறள் கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


பொருள்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை


திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

********************************************************

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள்

Monday, July 1, 2024

மாணவர் ஆற்றல்களை வளர்க்கும் பாடல்கள்



Songs for Students
to manifest
the powers within.

பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா


ஒருமுகமாய் மனம் குவித்தல் ஆற்றல் பொங்கியெழும்
அதை ஒரு செயலில் திருப்பிவிட்டால் வெற்றி நிற்சயம்
உறுதியோடு உழைக்கும் தன்மை உன்னிடம் இருந்தால் - நீ
நினைப்பதெல்லாம் நிறைவேறும் நம்பிக்கைகொண்டால் - வெற்றிவேண்டுமா

கடலைக்குடிக்கலாம் காற்றை நிறுத்தலாம்
உன் மனதை அடக்கினால் இந்த உலகைவெல்லலாம்
இறப்பை தடுக்கலாம் மீண்டும் பிறக்க மறுக்கலாம் - இந்த
இரவும் பகலும் இல்லா உலகில் என்றும் மகிழலாம் ---------- வெற்றிவேண்டுமா

வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் இருக்கு
அதில் கற்றுக்கொள்ளும் பாடம்தானே வீரனுக்கழகு
தோல்விகண்டால் வாழ்க்கையில் நீ துவண்டுவிடாதே - அதில்
பாடம் கற்று மீண்டும் முயல மறந்துவிடாதே ------------------ வெற்றிவேண்டுமா

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் பாடம்கற்றதெங்கே
தோல்விப்படிகள் ஏறிப்பெறா வெற்றிமாலையெங்கே
பிறந்தகன்று எழுந்தபோது விழுந்ததில்லையா - அது
மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவில்லையா -- ---------- வெற்றிவேண்டுமா

இல்லை என்ற வார்த்தை தன்னை என்றும் சொல்லாதே
இயலாது என்று கூறி நீயும் படுத்துவிடாதே
எல்லையில்லா வலிமையெல்லாம் உனக்குள்ளிருக்கு - நீ
காலம் இடம் கடந்தவன் இதை மனதில் நிறுத்து --------------- வெற்றிவேண்டுமா

வெற்றிதரும் ஆற்றல்யாவும் உனக்குள்ளிருக்கு
அதை பெற்றுத்தரும் சாவி உந்தன் மனதை அடக்கு -----------வெற்றிவேண்டுமா



பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

மனிதா நீ மகத்தானவன் மண்ணில் பரம்பொருளின் உருவானவன்
பாரதத்தாய் பெற்றமகன் பண்பாட்டில் சிறந்தமகன்
வரலாற்றை உருவாக்கும் தலைமகன் நீ மனிதா நீ ---- மனிதா நீ


மனம்வைத்தால் மலைகளுமுன் கைகளுக்குள் அடங்கிவிடும்
இமைப்பொழுதில் நதிகளுமே திசைமாறி பாய்ந்துவிடும்
விண்மீனும் உன்கழுத்தில் அணியாகமாறிவிடும்
மண்ணுலகில் உன்சுவடு வரலாறாய் ஆகிவிடும்
அழிவற்றவன் நீ......
அழிவற்றவன் நீ உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம்பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே - மனிதா நீ... -------

நம்பிக்கை நம்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை கொண்டாலே
ஆற்றல்களும் ஊற்றெனவே பொங்கியெழும்
மரணமற்ற பிறப்பற்ற எல்லையில்லா ஆன்மாநீ
மனதுவைத்தால் உலகமே உன்காலடியில் வந்துவிழும்
உண்மையிலே நீ.....
உண்மையிலே நீ பெரும் சக்திகளின் முழு உரு நீ
குரல்கொடுத்து புதுயுகத்தை அழைத்திடுவாயே - மனிதா நீ.....

சிங்கத்தின் இருதயத்தை வலிமைபெற தியானம்செய்வாய்
ஜீவனிலே சிவனைக்கண்டு தொண்டதனை செய்திடுவாய்
துணிவுகொண்ட உள்ளத்துடன் சிங்கமென எழுவாய்நீ
மாயைதன்னை போக்கியுந்தன் மகத்துவத்தையுணர்வாய்
முயன்றாலே நீ...
முயன்றாலே நீ உந்தன் முயற்சியெனும் பெரும்பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே - மனிதா நீ...


பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

க்ஷாத்ர வீர்ய பிரம்மதேஜ மூர்த்தீமான் வந்தார்
காற்றில் வானில் ஓங்கி ஒலித்திட அபயம் அபயம் என்றார்
ஆறுதல் கிடைத்தது பயந்திட்ட மக்களுக்கு

ஆனந்தம் பிறந்தது அடங்கிட்ட ஜீவனுக்குள்
எழுந்திரு என்றொரு முழக்கத்திலே
கலைந்தது மயக்கம் இதயத்திலே
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் - துச்ச
கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------ க்ஷாத்ர

இறப்பில்லா இறைவனின் பிள்ளைகள் நாம்
இறப்பென்று இனியொன்று நமக்கில்லைதான்
வேதரிஷிகளின் பரம்பரைனாம் - அந்த
தேவதேவியர் உறவுகள்னாம்
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் -
துச்ச கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------- க்ஷாத்ர

தொண்டுக்கும் துறவுக்கும் கொடிபிடிப்பாய்
அச்சமின்றி ஆகாயத்தை நீ துளைப்பாய்
உண்டாகும் உலகுக்கே உபகாரம் - என்றும்
உன்தோளில் நிற்கும் அவர் அன்புக்கரம்
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் -
துச்ச கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------- க்ஷாத்ர

ஆறுதல் கிடைத்ததுபயந்திட்ட மக்களுக்கு
ஆனந்தம் பிறந்தது அடங்கிட்ட ஜீவனுக்குள்
எழுந்திரு என்றொரு முழக்கத்திலே
கலைந்தது மயக்கம் உலகத்திலே
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் - துச்ச
கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------- க்ஷாத்ர

பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

நீயே உந்தன் விதியை படைக்கும் ஆண்டவன் ஆகின்றாய்
நினைத்தால் அதனை மாற்றியமைத்திட தகுந்தவனாகின்றாய்

நாமே படைக்கும் விதியைத்தவிர வேறொரு விதியில்லை
இதை நாமே உணர்ந்தால் பிறர்மேல் பழியை சுமத்திடவழியில்லை
எண்ணும் எண்ங்கள் நாம் பேசும் வார்த்தைகள்
செய்யும் காரியங்கள் எல்லாம் விதியின் காரணங்கள் ------ நீீயே

யாரோபடைத்த விதியை மாற்ற நம்மால் முடியாது
நாமே படைத்ததை நாமே அழித்திட தடைகள்கிடையாது
கடந்தகால செயல்களின் விளைவே விதியாய் வாய்த்தது
நிகழும்கால செயல்கள் நாளை விதியாய் வருகிறது - இன்று நிகழும்கால செயல்கள் நாளை விதியாய் வருகிறது --------- நீீயே

விதியே என்று வீழ்ந்தவனுக்கு கதியே என்றும் கிடையாது
விதியை வெல்லும் வல்லமை உனக்குள் உணர்ந்தால் துயரேகிடையாது
சோம்பல் வாழ்க்கை வாழும் வீணர்கள் விதியை நம்பிடுவார்
சுறுசுறு என்று இயங்கும் இளைஞர்கள்விதியை வென்றிடுவார் --- நீீயே

ஒன்றாய் புறப்படுவோம் நன்றாய் புறப்படுவோம்
நாமே நமது விதியை படைக்க இன்றே புறப்படுவோம் --- நீீயே



பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

வீரம்தா விவேகம்தா வெற்றிக்கனியைத்தா
பக்தி சக்தி முக்திதா பரமநிலையைத்தா

பரமசுகத்தைத்தா ---------------------------------------------------- வீரம்தா

கர்மசித்திதா கடமையுணர்வைத்தா
ஞானதியான யோகம்தா ஞான ஒளியைத்தா
ஞான அறிவைத்தா --------------------------------------------------- வீரம்தா

தியாகபுத்திதா திவ்விய வாழ்வைத்தா
ஜாதிபேதம் நீக்கித்தா தேசபக்திதா
தெய்வபக்திதா --------------------------------------------------------- வீரம்தா

அன்பைத்தா நல்லறிவைத்தா அடியில் சரணம்தா- உன்
அடியில் சரணம்தா
மரண பயத்தை நீக்கித்தா மண்ணில் உயர்வைத்தா என்னில் ஒளியைத்தா ----
--






பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

மனிதரெல்லாம் ஒரு குடும்பம்
அந்நியர் என்பவர் யாருமில்லை
அனைவரும் இறைவனின் பலபிள்ளை
பிரிவினை பகைமையை வென்றிடுவோம்
அகிலத்தை அன்பால் இணைத்திடுவோம் - ------- உலகமெல்லாம்


மொழி நிற மத பேதம் கடந்திடுவோம்
புது சமுதாயத்தை படைத்திடுவோம்
பசி பிணி அறியாமை நீக்கிடுவோம்
இறை பணி இதுவென்று செய்திடுவோம் ------------ உலகமெல்லாம்

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்
இந்திய நாட்டினை உயர்த்திடுவோம்
வேற்றுமை அனைத்தையும் விலக்கிடுவோம்
ஒற்றுமையாய் என்றும் வாழ்ந்திடுவோம்-------------- உலகமெல்லாம்

பாரத பண்பாடு நம்தீபம்
பாருக்கெல்லாம் அது ஒளிவீசும்
நாம் அதை வளர்த்திட உழைத்திடுவோம்
நாளும் இறைவனை துதித்திடுவோம் -------------------- உலகமெல்லாம்




பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

ஜீவனெல்லாம் இறைவனென்ற ஞானத்திலே
நாம் ஜீவசேவைசெய்யவேண்டும் வாழ்க்கையிலே
நாளும் மனிதக்கடவுளை நாம் போற்றிநிற்போமே
பல நாமரூபபேதம் நீக்கி பூஜைசெய்வோமே ------- ஜீவனெல்லாம்

கல்லுக்குள்ளே கடவுளை நாம் தொழுததுபோதும்
நம் கண்ணெதிரில் வாழும் அவனை தொழுதிடவாரும் --- ஜீவனெல்லாம் -
பசிவயிறாய் காட்சிதந்தால் உணவளித்திடுவோம்
பனிக்குளிரில் நடுங்கிநின்றால் உடையளித்திடுவோம்
பாமரனாய் தோன்றிவந்தால் படிப்பளித்திடுவோம்
தன்பகுத்தறிவால் உயர்வதற்கு வழிவகுத்திடுவோம்-------- ஜீவனெல்லாம்

கண்ணிழந்தும் காலிழந்தும் தோன்றும் மனிதனே
நம் கண்ணெதிரில் வாழ்ந்துவரும் தேவதேவனே
மனிதவடிவில் வாழும் இவர்கள் மகாதேவனே
இந்தப்புனித ஜீவ தேவைகளை பூர்த்தி செய்வோமே------ ஜீவனெல்லாம்

ஊனக்குறை காட்டிவந்தால் அன்புகாட்டுவோம்
அவர் மனநிறைவை பெறுவதற்கு ஊக்கமூட்டுவோம்
மனதுக்குள்ளே தன்னம்பிக்கை பாலை ஊற்றுவோம்
அவர் மனிதனாக நிமிர்ந்துவாழ பாதை காட்டுவோம் ----- ஜீவனெல்லாம்

வித்தைக்கோர் ஆலயம் எங்கள் வித்யாலயம்
இது ஜீவசேவை செய்துவரும் தேவ ஆலயம்
விவேகவழியில் கல்விஅளிக்கும் நவீன குருகுலம்
அகிலஉலகம் இணைந்து நடத்தும் தர்மஸ்தாபனம்----- ஜீவனெல்லாம்



மனதில் உறுதி வேண்டும் - - மஹாகவி பாரதியார்

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

 

Sivaprakasa Maha Vidyalayam - Thumpalai - Point Pedro - 13-09-2024

Personality Development Programme 10.30 am to 11.30 am Participants - 80 ஜீவனெல்லாம் இறைவன் என்ற ஞானத்திலே  பாடல் Jeevanellam Iraiva...